Friday, March 27, 2026

மார்ச் 29 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 மார்ச் 29 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை 

குருத்து ஞாயிறு 


Matthew 21:1-11 (procession with palms)

Isaiah 50:4-7

Psalm 22:8-9, 17-20, 23-24

Philippians 2:6-11

Matthew 26:14–27:66


இன்றைய ஜெபம்:

இயேசு கிறிஸ்துவே, சில நேரங்களில் நான் உம்மைப் பின்பற்றி, உம்மை என் ஆண்டவர் என்றும் என் தேவன் என்றும் அறிக்கையிடுகிறேன்; ஆனால் மற்ற நேரங்களில் உம்முடைய போதனைகளை நிராகரித்து, உம்முடைய முன்மாதிரியைப் பின்பற்ற மறுக்கிறேன் என்பதை உணர்கிறேன். என்னை மன்னித்தருளும். உம்முடைய அன்பு மற்றும் மன்னிப்பிற்கு உண்மையான சாட்சியாக நான் விளங்குவதற்கு, உம்முடைய பரிசுத்த ஆவியினால் எனக்குச் பெலன் தந்தருளும். ஆமென்.


மத்தேயு நற்செய்தி 


காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்

(மாற் 14:10-11; லூக் 22:3-6)

14பின்னர், பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 15“இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்

(மாற் 14:12-16; லூக் 22:7-14)

17புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். 18இயேசு அவர்களிடம், “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார். 19இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல்

(மாற் 14:17-21; லூக் 22:21-23; யோவா 13:21-30)

20மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். 21அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.✠ 22அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், “ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். 23அதற்கு அவர், “என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.✠ 24மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்” என்றார். 25அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் “ரபி, நானோ?” என அவரிடம் கேட்க இயேசு, “நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.

ஆண்டவரின் திருவிருந்து

(மாற் 14:22-26; லூக் 22:15-20; 1 கொரி 11:23-25)

26அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார். 27பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;✠ 28ஏனெனில், இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.✠ 29இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். 30அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்

(மாற் 14:27-31; லூக் 22:31-34; யோவா 13:36-38)

31அதன்பின்பு, இயேசு அவர்களிடம், “இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது.✠ 32நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.✠ 33அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்” என்றார். 34இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். 35பேதுரு அவரிடம், “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு

(மாற் 14:32-42; லூக் 22:39-46)

36பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், “நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்” என்று அவர்களிடம் கூறி, 37பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். 38அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார். 39பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.✠ 40அதன் பின்பு, அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? 41உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால், உடல் வலுவற்றது. எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார். 42மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 43அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. 44அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 45பிறகு சீடர்களிடம் வந்து, “இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். 46எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்” என்று கூறினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுத்தலும் கைது செய்தலும்

(மாற் 14:43-50; லூக் 22:47-53; யோவா 18:3-12)

47இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது. 48அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், “நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.✠ 49அவன் நேராக இயேசுவிடம் சென்று, “ரபி வாழ்க” எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். 50இயேசு அவனிடம், “தோழா, எதற்காக வந்தாய்?” என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். 51உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். 52அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். 53நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு* மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. 54அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?” என்றார்.✠ 55அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே;✠ 56இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.

தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு

(மாற் 14:53-65; லூக் 22:54-55; 63-71; யோவா 18:13-14, 19-24)

57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். 58பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். 59தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். 60பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். 61அவர்கள், “இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்” என்று கூறினார்கள்.✠ 62அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?” என்று கேட்டார். 63ஆனால், இயேசு பேசாதிருந்தார். மேலும், தலைமைக் குரு அவரிடம், “நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்” என்றார். 64அதற்கு இயேசு, “நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.✠ 65உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, “இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. 66நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” எனப் பதிலளித்தார்கள்.✠ 67பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,✠ 68“இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்” என்று கேட்டனர்.

பேதுரு மறுதலித்தல்

(மாற் 14:66-72; லூக் 22:56-62; யோவா 18:15-18, 25-27)

69பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, “நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே” என்றார். 70அவரோ, “நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். 71அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, “இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்” என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். 72ஆனால், பேதுரு, “இம்மனிதனை எனக்குத் தெரியாது” என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். 73சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில், உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது” என்று கூறினார்கள். 74அப்பொழுது அவர், “இந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. 75அப்பொழுது, “சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்

(மாற் 15:1; லூக் 23:1-2; யோவா 18:28-32)

1பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். 2அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.

யூதாசின் தற்கொலை

(திப 1:18-19)

3அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, 4“பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்” என்றான். அதற்கு அவர்கள், “அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்” என்றார்கள். 5அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான். 6தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, “இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல” என்று சொல்லி, 7கலந்தாலோசித்து, அந்நியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். 8இதனால்தான் அந்நிலம் “இரத்த நிலம்” என இன்றுவரை அழைக்கப்படுகிறது.

9-10“இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப் பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்”


என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.✠

இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்

(மாற் 15:2-5; லூக் 23:3-5; யோவா 18:33-38)

11இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று கூறினார். 12மேலும், தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. 13பின்பு, பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?” என்றான். 14அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.

இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்

(மாற் 15:6-15; லூக் 23:13-25; யோவா 18:39-19:16)

15மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். 16அந்நாளில் பரபா* என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். 17மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், “நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா?* அல்லது மெசியா என்னும் இயேசுவையா?” என்று கேட்டான். 18ஏனெனில், அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும். 19பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, “அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார். 20ஆனால், தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். 21ஆளுநன் அவர்களைப் பார்த்து, “இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள் ‘பரபாவை’ என்றார்கள். 22பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும்” என்று பதிலளித்தனர். 23அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். 24பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.✠ 25அதற்கு மக்கள் அனைவரும், “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்” என்று பதில் கூறினர். 26அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்

(மாற் 15:16-20; யோவா 19:2-3)

27ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; 28அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். 29அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர்; 30அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; 31அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல்

(மாற் 15:21-32; லூக் 23:26-43; யோவா 19:17-27)

32அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். 33‘மண்டையோட்டு இடம்’ என்று பொருள்படும் ‘கொல்கொதா’வுக்கு வந்தார்கள்; 34இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.✠ 35அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;✠ 36பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; 37அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் “இவன் யூதரின் அரசனாகிய இயேசு” என்று எழுதப்பட்டிருந்தது. 38அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். 39அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள்.✠ 40நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.✠ 41அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். 42அவர்கள், “பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘நான் இறைமகன்’ என்றானே!” என்று கூறினார்கள்.✠ 44அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.

இயேசு உயிர்விடுதல்

(மாற் 15:33-41; லூக் 23:44-49; யோவா 19:28-30)

45நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. 46மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்.✠ 47அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர். 48உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.✠ 49மற்றவர்களோ, ‘பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்”* என்றார்கள். 50இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.

51அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. 52கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. 53இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். 54நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன்” என்றார்கள். 55கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். 56அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம்

(மாற் 15:42-47; லூக் 23:50-56; யோவா 19:38-42)

57மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். 58அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். 59யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, 60தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். 61அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.

கல்லறைக்குக் காவல்

62மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு* அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். 63அவர்கள், “ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ‘மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. 64ஆகையால், மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ‘இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்’ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்” என்றனர். 65அதற்குப் பிலாத்து அவர்களிடம், “உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்” என்றார். 66அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

(thanks to www.arulvakku.com)



இயேசுவின் தீவிரமான அன்பு


"பேஷன்" (Passion) என்ற வார்த்தை ஆழமான தாக்கங்களை உடையது. இறையியல் ரீதியாக, இயேசு நம் ஒவ்வொருவருக்காகவும் ஏற்றுக்கொண்ட அந்தத் துன்பமிகு அன்பை விவரிக்க இதை நாம் பயன்படுத்துகிறோம். அவர் நம் பாவங்களின் தண்டனையையும் அழிவு சக்திகளையும் தாமாகவே முன்வந்து ஏற்றுக்கொண்டபோது, அவர் அனுபவித்த காயங்கள், ஏளனங்கள் மற்றும் சிலுவைச் சாவே அந்த அன்பு.


உலகமானது இந்த "பேஷன்" என்ற வார்த்தையை வெறும் சிற்றின்ப உணர்ச்சிகளுடனும், இச்சையார்ந்த ஈர்ப்புகளுடனும் ஒப்பிட்டு அதன் புனிதத்தைக் குறைத்து மதிப்பிடுகிறது.


நாம் எதன் மீதாவது மிகுந்த அக்கறை காட்டும்போது அல்லது ஒரு காரியத்தை ஆர்வத்துடன் செய்ய முற்படும்போதும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். அதனால்தான், இயேசு சிலுவைப் பாடுகளை அனுபவித்த அந்த வேளையிலும் நம் மீது "தீவிரமான" அக்கறை கொண்டிருந்தார் என்று நம்மால் சொல்ல முடிகிறது.


இயேசு தனது பொது வாழ்விலும், புனித வெள்ளியன்றும் வெளிப்படுத்திய அந்த வலிமையான அன்பு, மற்றவர்கள் மீது "இரக்கம்" (Compassion) கொள்வது என்றால் என்ன என்பதற்கான ஒரு பாடமாகும். நாம் மற்றவர்களுடைய துன்பங்களில் அவர்களோடு பயணிக்கிறோம்; அவர்களோடு இணைந்து நாமும் "துன்புறுகிறோம்". இதுவே அன்பின் மிகப்பரிசுத்தமான வடிவம்.


பாடுகளின் ஞாயிறுக்கான திருமுறைப் பகுதிகளை வாசிக்கும்போது, அவை இயேசுவின் தீவிரமான அன்பை உங்களுக்கு எப்படி வெளிப்படுத்துகின்றன என்பதை உற்று நோக்குங்கள். இயேசுவை உற்சாகமாக வரவேற்ற மக்களிடமும், அதே சமயம் அவரை நிராகரித்து மறுதலித்த மக்களிடமும் உங்களையே பொருத்திப் பாருங்கள்.


தனது இறுதி நேரத்தின் கடுமையான வேதனைகளுக்குத் தம்மைக் உட்படுத்திக் கொண்டபோது, இயேசு உங்கள் மீது எவ்வளவு இரக்கம் கொண்டிருந்திருப்பார் என்று சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்கள் மீது நீங்கள் இரக்கம் காட்டத் தவறியதன் மூலம் அவருக்கு எத்தனையோ காயங்களை ஏற்படுத்திய போதிலும், அவர் உங்களுக்காக இதைச் செய்தார். உங்கள் மீதான அவரது இந்தத் தீவிரமான அன்பில் மகிழுங்கள்! இது உங்கள் தவறுகளை எண்ணி மனம் வருந்தி, பிறர் மீது புனிதமான அன்பை வெளிப்படுத்த உங்களுக்கு வலிமையூட்டும்.

© by Terry A. Modica, Good News Ministries


Saturday, March 14, 2026

மார்ச் 15 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 மார்ச் 15 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை 

தவக்காலத்தின் 4ம் ஞாயிறு 

1 Samuel 16:1b, 6-7, 10-13a

Psalm 23:1-6

Ephesians 5:8-14

John 9:1-41  

யோவான் நற்செய்தி 

பிறவியிலேயே பார்வையற்றவர் பார்வை பெறுதல்

1இயேசு சென்றுகொண்டிருக்கும்போது பிறவியிலேயே பார்வையற்ற ஒருவரைக் கண்டார்.

 

2“ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக்காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?” என்று இயேசுவின் சீடர்கள் அவரிடம் கேட்டார்கள்.

 

3அவர் மறுமொழியாக, 

“இவர் செய்த பாவமும் அல்ல; இவர் பெற்றோர் செய்த பாவமும் அல்ல; கடவுளின் செயல் இவர் வழியாக வெளிப்படும்பொருட்டே இப்படிப் பிறந்தார்.

 

4பகலாய் இருக்கும் வரை என்னை அனுப்பியவரின் செயலை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. இரவு வருகிறது; அப்போது யாரும் செயலாற்ற இயலாது.

 

5

நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி”

 என்றார். 

6இவ்வாறு கூறியபின் அவர் தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறு உண்டாக்கி, அச்சேற்றைப் பார்வையற்றவருடைய கண்களில் பூசி,

 

7

“நீர் சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்”

 என்றார். சிலோவாம் என்பதற்கு ‘அனுப்பப்பட்டவர்’ என்பது பொருள். அவரும் போய்க் கழுவிப் பார்வை பெற்றுத் திரும்பி வந்தார்.

8அக்கம் பக்கத்தாரும், அவர் பிச்சையெடுத்துக் கொண்டிருந்ததை முன்பு பார்த்திருந்தோரும், “இங்கே அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர் இவர் அல்லவா?” என்று பேசிக்கொண்டனர்.

 

9சிலர், “அவரே” என்றனர்; வேறு சிலர் “அவரல்ல; அவரைப்போல் இவரும் இருக்கிறார்” என்றனர். ஆனால், பார்வை பெற்றவர், “நான்தான் அவன்” என்றார்.

 

10அவர்கள், “உமக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?” என்று அவரிடம் கேட்டார்கள்.

 

11அவர் அவர்களைப் பார்த்து, “இயேசு எனப்படும் மனிதர் சேறு உண்டாக்கி, என் கண்களில் பூசி, ‘சிலோவாம் குளத்துக்குப் போய்க் கண்களைக் கழுவும்’ என்றார். நானும் போய்க் கழுவினேன்; பார்வை கிடைத்தது” என்றார்.

 

12“அவர் எங்கே?” என்று அவர்கள் கேட்டார்கள். பார்வை பெற்றவர், “எனக்குத் தெரியாது” என்றார்.

பரிசேயரின் கேள்விக்கணைகள்

13முன்பு பார்வையற்றவராய் இருந்த அவரை அவர்கள் பரிசேயரிடம் கூட்டிவந்தார்கள்.

 

14இயேசு சேறு உண்டாக்கி அவருக்குப் பார்வை அளித்தநாள் ஓர் ஓய்வுநாள்.

 

15எனவே, “எப்படிப் பார்வை பெற்றாய்?” என்னும் அதே கேள்வியைப் பரிசேயரும் கேட்டனர். அதற்கு அவர் “இயேசு என் கண்களில் சேறு பூசினார்; பின் நான் கண்களைக் கழுவினேன்; இப்போது என்னால் பார்க்க முடிகிறது” என்றார்.

 

16பரிசேயருள் சிலர், “ஓய்வுநாள் சட்டத்தைக் கடைப்பிடிக்காத இந்த ஆள் கடவுளிடமிருந்து வந்திருக்க முடியாது” என்று பேசிக் கொண்டனர். ஆனால், வேறு சிலர், “பாவியான ஒரு மனிதரால் இத்தகைய அரும் அடையாளங்களைச் செய்ய இயலுமா?” என்று கேட்டனர். இவ்வாறு அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.

 

17அவர்கள் பார்வையற்றிருந்தவரிடம், “உனக்குப் பார்வை அளித்த அந்த ஆளைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் கேட்டனர். “அவர் ஓர் இறைவாக்கினர்” என்றார் பார்வை பெற்றவர்.

18அவர் பார்வையற்றிருந்து இப்போது பார்வை பெற்றுள்ளார் என்பதை அவருடைய பெற்றோரைக் கூப்பிட்டுக் கேட்கும்வரை யூதர்கள் நம்பவில்லை.

 

19“பிறவியிலேயே பார்வையற்றிருந்தான் என நீங்கள் கூறும் உங்கள் மகன் இவன்தானா? இப்போது இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?” என்று கேட்டார்கள்.

 

20அவருடைய பெற்றோர் மறுமொழியாக, “இவன் எங்களுடைய மகன்தான். இவன் பிறவிலேயே பார்வையற்றவன்தான்.

 

21ஆனால், இப்போது எப்படி அவனுக்குக் கண் தெரிகிறது என்பதோ யார் அவனுக்குப் பார்வை அளித்தார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள். அவன் வயது வந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்” என்றனர்.

 

22யூதர்களுக்கு அஞ்சியதால்தான் அவருடைய பெற்றோர் இப்படிக் கூறினர். ஏனெனில், இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளும் எவரையும் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கிவிடவேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தங்களிடையே உடன்பாடு செய்திருந்தார்கள்.

 

23அதனால் அவருடைய பெற்றோர், “அவன் வயதுவந்தவன் தானே! அவனிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்றனர்.

24பார்வையற்றிருந்தவரை யூதர்கள் இரண்டாம் முறையாகக் கூப்பிட்டு அவரிடம், “உண்மையைச் சொல்லிக் கடவுளை மாட்சிப்படுத்து.* இம்மனிதன் ஒரு பாவி என்பது எங்களுக்குத் தெரியும்” என்றனர்.

 

25பார்வை பெற்றவர் மறுமொழியாக, “அவர் பாவியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஒன்று மட்டும் எனக்குத் தெரியும்; நான் பார்வையற்றவனாய் இருந்தேன்; இப்போது பார்வை பெற்றுள்ளேன்” என்றார்.

 

26அவர்கள் அவரிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?” என்று கேட்டார்கள்.

 

27அவர் மறுமொழியாக, “ஏற்கெனவே நான் உங்களிடம் சொன்னேன். அப்போது நீங்கள் கேட்கவில்லை. இப்போது மீண்டும் ஏன் கேட்க விரும்புகிறீர்கள்? ஒரு வேளை நீங்களும் அவருடைய சீடர்கள் ஆக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டார்.

 

28அவர்கள் அவரைப் பழித்து, “நீ அந்த ஆளுடைய சீடனாக இரு. நாங்கள் மோசேயின் சீடர்கள்.

 

29மோசேயோடு கடவுள் பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும்; இவன் எங்கிருந்து வந்தான் என்பதே தெரியாது” என்றார்கள்.

 

30அதற்கு அவர் “இது வியப்பாய் இல்லையா? எனக்குப் பார்வை அளித்திருக்கிறார்; அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தவர் எனத் தெரியாது என்கிறீர்களே!

 

31பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை; இறைப்பற்றுடையவராய்க் கடவுளின் திருவுளப்படி நடப்பவருக்கே அவர் செவி சாய்க்கிறார் என்பது நமக்குத் தெரியும். 

32பிறவியிலேயே பார்வையற்றிருந்த ஒருவர் பார்வை பெற்றதாக வரலாறே இல்லையே!

 

33இவர் கடவுளிடமிருந்து வராதவர் என்றால் இவரால் எதுவுமே செய்திருக்க இயலாது” என்றார்.

 

34அவர்கள் அவரைப் பார்த்து, “பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குக் கற்றுத் தருகிறாய்?” என்று சொல்லி அவரை வெளியே தள்ளினர்.

பார்வையற்றோர் பரிசேயரே

35யூதர்கள் அவரை வெளியே தள்ளிவிட்டதைப்பற்றி இயேசு கேள்விப்பட்டார்; பின் அவரைக் கண்டபோது, 

“மானிடமகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?”

 என்று கேட்டார்.

 

36அவர் மறுமொழியாக, “ஐயா, அவர் யார்? சொல்லும். அப்போது நானும் அவரிடம் நம்பிக்கை கொள்வேன்” என்றார்.

 

37இயேசு அவரிடம், 

“நீர் அவரைப் பார்த்திருக்கிறீர்! உம்மோடு பேசிக்கொண்டிருப்பவரே அவர்”

 என்றார்.

 

38அவர், “ஆண்டவரே, நம்பிக்கைகொள்கிறேன்” என்று கூறி அவரை வணங்கினார்.

 

39அப்போது இயேசு, 

“தீர்ப்பு அளிக்கவே நான் இவ்வுலகிற்கு வந்தேன்; பார்வையற்றோர் பார்வை பெறவும் பார்வையுடையோர் பார்வையற்றோர் ஆகவுமே வந்தேன்”

 என்றார்.

 

40அவரோடு இருந்த பரிசேயர் இதைக் கேட்டபோது, “நாங்களுமா பார்வையற்றோர்?” என்று கேட்டனர்.

 

41இயேசு அவர்களிடம், 

“நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால், உங்களிடம் பாவம் இராது. ஆனால், நீங்கள் ‘எங்களுக்குக் கண் தெரிகிறது’ என்கிறீர்கள். எனவே, நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்”

 என்றார்.

(Thanks to www.arulvakku.com)


மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது?

கிறிஸ்துவை நோக்கிய மனமாற்றம் என்பது ஒரு பயணம் அல்லது செயல்முறையாகும். நற்செய்திப் பகுதியில் வரும் அந்தப் பார்வையற்ற மனிதன், விசுவாசத்தை நோக்கிய இந்தப் பயணத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறான். கவனித்துப் பார்த்தால், ஆரம்பத்தில் அவன் இயேசுவிடம் செல்லவில்லை; இயேசுதான் அவனிடம் வந்தார். அந்த மனிதனோ, என்ன நடக்கும் என்று காத்திருந்து, பின் இயேசுவின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து பதிலளித்தான்.

இயேசு நம்மைத் தேடி வரும்போதும், அவருடைய தொடுதலுக்கு நம்மை நாம் ஒப்புக்கொடுக்கும்போதும் தான் மனமாற்றம் தொடங்குகிறது. அவர் உண்மையைக் காண நம் கண்களைத் திறக்கிறார், ஆனால் நாம் உடனடியாக அனைத்தையும் புரிந்துகொள்வதில்லை.

தன்னுடைய சுகத்தைப் பற்றி அண்டை வீட்டார் கேட்டபோது, இயேசு யார் என்பதை அந்த மனிதன் இன்னும் புரிந்துகொள்ளவில்லை; அவரை ஒரு சாதாரண மனிதராகவே அவன் கருதினான்.

பின்னர், இயேசு யார் என்பது குறித்த பரிசேயர்களின் விவாதங்களைக் கேட்ட அழுத்தம், அவனை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியது. இயேசு ஒரு 'புடைபெயர்ச்சி' அல்லது 'இறைவாக்கினராக' இருக்க வேண்டும் என்று அவன் முடிவு செய்தான்—யூதர்களைப் பொறுத்தவரை இது மிகவும் மரியாதைக்குரிய, புனிதமான ஒரு நிலையாகும்.

அடுத்ததாக, பரிசேயர்கள் அவனிடம் கடுமையாக நடந்துகொண்டு, இயேசுவை மெசியா (கிறிஸ்து) என்று கூறினால் அவனை ஜெப ஆலயத்திலிருந்து நீக்கிவிடுவதாக மிரட்டியபோது, அது உண்மையாக இருக்குமோ என்று அவன் வியக்கத் தொடங்கினான். அவர்கள் இயேசுவை வெறுப்பதற்கான காரணங்களே, அவனது ஆன்மீகக் குருட்டுத்தன்மையைக் குணப்படுத்தும் கண்-திறப்பான்களாக மாறின.

இறுதியாக, பரிசேயர்களால் அவன் அனுபவித்த கொடுமைகளுக்குப் பிறகு, அவனுக்கு ஆறுதல் அளிக்க இயேசு மீண்டும் அவனைத் தேடி வந்தார். இயேசுவின் அந்தப் பரிவான செயலில், அவர் யார் என்பதை அந்த மனிதனால் தெளிவாகக் காண முடிந்தது.

மனமாற்றம் — அதாவது நமது ஆன்மீகப் பார்வையின் தூய்மைப்படுத்துதல் — கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் நாம் உணர்ந்துகொள்ளும்போது, நம் துன்பங்கள் எனும் நெருப்பில்தான் நிகழ்கிறது.

© by Terry A. Modica, Good News Ministries

 

 


Friday, February 27, 2026

மார்ச் 1 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை

மார்ச் 1 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை 

தவக்காலத்தின் 2ம் ஞாயிறு 


Genesis 12:1-4a

Psalm 33:4-5, 18-20, 22

2 Timothy 1:8b-10

Matthew 17:1-9


மத்தேயு நற்செய்தி 


இயேசு தோற்றம் மாறுதல்

(மாற் 9:2-13; லூக் 9:28-36)

1ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். 2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. 3இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். 4பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?” என்றார். 5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.✠ 6அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். 7இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்” என்றார். 8அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. 9அவர்கள் மலையிலிருந்து இறங்கிவந்தபோது இயேசு, “மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது” என அவர்களுக்குக் கட்டளையிட்டார்

(thanks to www.arulvakku.com)


உங்கள் இன்றைய வாழ்விற்கான மறுரூபமாதல்

தாபோர் மலையின் உச்சியில், கிறிஸ்துவின் தூய ஒளி வெளிப்பட்டது என்பதை இந்த நற்செய்தி வாசிப்பில் காண்கிறோம். தந்தை, “இவர் என் அன்பார்ந்த மைந்தர்; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று கூறினார்.


ஒவ்வொரு முறையும் நாம் அவருக்குச் செவிசாய்க்கும்போதும், நம் விசுவாசம் நேற்றைய தினத்தை விட இன்று அதிக ஒளியூட்டப்பட அனுமதிக்கும்போதும் இந்த மறுரூபமாதல் மீண்டும் நிகழ்கிறது. இப்போது நாமே மறுரூபமடைகிறோம்! நாம் நமது உண்மையான அடையாளத்திற்கு மாற்றப்படுகிறோம். நமது உண்மையான அடையாளம் என்ன? அது கடவுளின் சாயலில் படைக்கப்பட்டு, கடவுளின் உருவத்தில் திருமுழுக்கு பெற்ற நமது ஆழமான உள்ளுணர்வு ஆகும்.


நமது உண்மையான அடையாளத்தின்படி வாழும்போது நாம் வாழ்க்கையை இன்னும் அதிகமாக ரசிக்கிறோம். உதாரணமாக, நீங்கள் பொறுமையின்றி இருக்கும்போது எப்படி உணர்கிறீர்கள்? அவ்வளவு நன்றாக இருக்காது, அல்லவா? ஏனெனில் கடவுள் பொறுமையுள்ளவர் (அவருடைய மற்றும் உங்களுடைய உண்மையான அடையாளத்தைப் பற்றிய விளக்கத்திற்கு 1 கொரிந்தியர் 13:4-7 ஐப் பார்க்கவும்). நாம் பொறுமையாக இருக்கும்போது, நாம் அதிக மகிழ்ச்சியாக இருக்கிறோம்.


இந்தத் தவக்காலத்தில், நாம் எவ்வளவு தூரம் கிறிஸ்துவைப் போல் இருக்கிறோம் என்பதைத் தாழ்மையுடன் ஆராய்ந்து, நமது பாவங்களிலிருந்து மனம் திரும்புவதன் மூலம், நமக்குள் இருக்கும் இருளை அவருடைய ஒளி அழிக்க அனுமதிக்கிறோம்.


இயேசு தமது அழைப்பை நிறைவேற்றுவதற்காக மலை உச்சி அனுபவத்தை விட்டு இறங்கி வந்தார். கிறிஸ்துவைப் பின்பற்றி, நாமும் கடவுள் நமக்கு அளித்த பணிகளைச் செய்ய நமது மலை உச்சிகளிலிருந்து (இனிமையான அனுபவங்களிலிருந்து) வெளியேறுகிறோம். திமோத்தேயு எழுதிய திருமுகத்தில் குறிப்பிட்டுள்ளபடி, புனிதமான வாழ்க்கையை வாழ்வதில் சிரமங்கள் இருந்தாலும், ஒவ்வொரு கல்வாரிக்குப் பிறகும் எப்போதும் ஓர் உயிர்ப்பு (ஈஸ்டர்) உண்டு என்ற உண்மையை நாம் தேறுதலாகக் கொள்ளலாம். நாம் "கடவுள் அளிக்கும் வல்லமையில்" நம்பிக்கை வைக்கலாம்.


கவனியுங்கள். உங்களைப் பற்றி கடவுள் என்ன சொல்கிறார் என்று உங்களால் கேட்க முடிகிறதா? தாபோர் மலையில் இயேசுவைப் பற்றி அவர் சொன்ன அதே வார்த்தைகளைத்தான் இப்போதும் சொல்கிறார்: “இவர் என் அன்பார்ந்த பிள்ளை; இவருக்குச் செவிசாயுங்கள்.” கிறிஸ்துவின் ஊழியத்தில் அவருடைய பங்காளராக நீங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்?


தனிப்பட்ட தியானத்திற்கான கேள்விகள்:

உங்கள் வாழ்க்கையில் இயேசு எதை மறுரூபமாக்க (மாற்ற) வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?


இயேசுவின் குணப்படுத்தும் ஒளியில் அந்தச் சூழலைக் கொண்டுவர இந்த வாரம் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

© by Terry A. Modica, Good News Ministries


 



Friday, February 20, 2026

பிப்ரவரி 22 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 பிப்ரவரி 22 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை 

தவக்காலத்தின் முதல் ஞாயிறு 


Genesis 2:7-9; 3:1-7

Psalm 51:3-6, 12-13, 17

Romans 5:12-19

Matthew 4:1-11


மத்தேயு நற்செய்தி 


இயேசு சோதிக்கப்படுதல்

(மாற் 1:12-13; லூக் 4:1-13)

1அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார்.✠ 2அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். 3சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். 4அவர் மறுமொழியாக,

“‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’

என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.✠ 5பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 6“நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்;

‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’

என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது.✠ 7இயேசு அதனிடம்,

“‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்’

எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்.✠ 8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச்சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, 9அவரிடம், “நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது. 10அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே,

‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’

என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.✠ 11பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

(thanks to www.arulvakku.com)


இந்தத் தவக்காலத்தில் உங்களுக்கு என்ன வெற்றி தேவை? 


சோதனைகளை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்? தவக்காலத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று கடவுளின் வார்த்தை நமக்கு முன்வைக்கும் தனிப்பட்ட சவால் இதுதான். எனவே, இயேசுவுடன் இணைந்து நமது பயணத்தைத் தொடங்குவோம்; நம் வாழ்வின் இந்த நிலையில் நாம் அடையக்கூடிய மிகப்பரிசுத்தமான இடத்தை நோக்கிப் பயணிப்போம்.


இந்தத் தவக்காலம் மற்றெந்த தவக்காலத்தையும் போன்றதல்ல. கடந்த ஆண்டு, உங்களுக்கு வேறுபட்ட தேவைகள், வேறுபட்ட வளர்ச்சி நிலைகள் மற்றும் வேறுபட்ட புரிதல்கள் இருந்தன. அதன்பின் பல காரியங்கள் நடந்துவிட்டன; அவை அனைத்தும் ஆண்டவர் இப்போது உங்கள் வாழ்க்கையில் செய்யப்போகும் காரியங்களுக்கான ஆயத்தங்களே.


இந்த ஆண்டு உங்களுக்கு என்ன வெற்றி தேவை? எதற்கு உயிர்ப்பு (resurrection) தேவை? அந்த இலக்கை அடைய, இயேசு உங்களை தவக்காலம் மற்றும் தன்னல மறுப்பு எனும் சிலுவையின் வழியாகவும், அவரது கல்லறையின் வழியாகவும் அழைத்துச் சென்று, அவரது அன்பு நல்வாழ்வையும் புதிய வாழ்வையும் அளிக்கும் இறை ஒளியில் உங்களை வழிநடத்துவார்.


தவக்காலத்தின் போதும் — நாம் தியாகங்களைச் செய்து நமது துன்பங்களை கிறிஸ்துவின் பாடுகளோடு இணைக்கும் ஒவ்வொரு முறையும் — நாம் இயேசுவைப் பின்பற்றி சிலுவைக்கும் உயிர்ப்புக்கும் செல்கிறோம். இதில் நமது சொந்தச் சிலுவைகளை ஒரு புதிய பார்வையில் பார்ப்பது அடங்கும், ஏனெனில் நாம் ஏங்கும் வெற்றிகளை அடைவதற்கு 'கல்வாரிப் பாதை' ஒன்றே வழியாகும்.


ஈஸ்டர் என்பது வெறும் வண்ணமயமான முட்டைகள், சாக்லேட் முயல்கள் மற்றும் பெரிய விருந்துகள் கொண்ட ஒரு விடுமுறை தினமாக மட்டும் இருக்கக்கூடாது என்று நாம் விரும்பினால், இந்தத் தவக்காலத்தை வெறும் 40 நாள் எரிச்சலூட்டும் கடமையான தியாகங்களாகவும், வெள்ளிக்கிழமைகளில் இறைச்சியற்ற உணவை உண்பதாகவும், எப்போதாவது ஒருமுறை தேவாலய நிகழ்வுகளில் கலந்துகொள்வதாகவும் மட்டும் நாம் வைத்திருக்கக்கூடாது.


உயிர்ப்பின் வல்லமையை நாம் அனுபவிக்க விரும்பினால், நமது பாவங்களுக்காக வருந்துவதிலும் மனந்திரும்புவதிலும் உள்ள வல்லமையை நாம் அனுபவிக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மரணத்தின் சக்தியற்ற நிலையை — அதாவது நமது சுயநலம், உலகப்பற்று மற்றும் கிறிஸ்துவைப் போல் இல்லாத நமது நடத்தைகளின் மரணத்தை — நாம் அனுபவிக்க வேண்டும்.


தனிப்பட்ட சிந்தனைக்கான கேள்விகள்:

உங்களுக்காகவே வாழும் 'சுயத்தை' (self) ஒழிக்க இந்த வாரம் நீங்கள் என்ன செய்யலாம்? உதாரணமாக, உங்கள் சுயநலம் எதைச் செய்யத் தூண்டுகிறதோ அதற்கு நேர்மாறான ஒரு நற்செயலைச் செய்ய நினையுங்கள்.


இந்த ஆன்மீகப் பயிற்சி, பாவத்தை எதிர்த்து நிற்பதை எவ்வாறு எளிதாக்கும்?


© by Terry A. Modica, Good News Ministries


Saturday, February 14, 2026

பிப்ரவரி 15 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை

 பிப்ரவரி 15 2026 ஞாயிறு நற்செய்தி மறையுரை 

ஆண்டின் 6ம் ஞாயிறு 


Sirach 15:15-20

Ps 119:1-2,4-5,17-18,33-34

1 Corinthians 2:6-10

Matthew 5:17-37

மத்தேயு நற்செய்தி 


திருச்சட்டம் நிறைவேறுதல்

17திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.✠ 18‘விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது’ என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.✠ 19எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். 20மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

சினங்கொள்ளுதல்

21‘கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.✠ 22ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ ‘முட்டாளே’ என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; ‘அறிவிலியே’ என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். 23ஆகையால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 24அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 25உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். 26கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

விபசாரம்

(மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18)

27“‘விபசாரம் செய்யாதே’ எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.✠ 28ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. 29உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.✠ 30உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.✠ 31‘தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்’ எனக் கூறப்பட்டிருக்கிறது.✠ 32ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.”✠

ஆணையிடுதல்

33“மேலும், ‘பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்’ என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.✠ 34ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால், அது கடவுளின் அரியணை.✠ 35மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில், அது பேரரசரின் நகரம். 36உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில், உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. 37ஆகவே, நீங்கள் பேசும்போது ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ எனவும் ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

(thanks to www.arulvakku.com)




இயேசுவின் அன்பின் சட்டம் (The Law of Love)

இயேசுவின் காலத்தில் இருந்த யூத சமய அதிகாரிகள், கடவுளின் சட்டங்களை அப்படியே எழுத்துவடிவில் (literalists) பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். ஆனால், இயேசு அந்த சட்டங்களுக்கு ஒரு ஆழமான பொருளைக் கொடுத்தார். அவர் சட்டத்தின் இலக்கான அன்பின் மீது தனது கவனத்தைச் செலுத்தினார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை நற்செய்தி வாசகத்தில், நம்முடைய கீழ்ப்படிதல் அன்பினால் தூண்டப்படாவிட்டால், நாம் சட்டத்தை நிறைவேற்றத் தவறிவிடுகிறோம் என்று இயேசு விளக்குகிறார்.

இயேசு சட்டத்தின் உண்மையான அர்த்தத்தை முழுமையாக நிறைவேற்றினார். அவ்வாறு செய்கையில், அவர் நம்முடைய கீழ்ப்படிவின்மையை தன்மேல் ஏற்றுக்கொண்டு, அன்பின் மிக உன்னதமான கொடையாக நமக்காகத் தன் உயிரைத் தந்தார்.

அவரைப் பின்பற்றுபவர்களாக, நாமும் அன்பில் தாராள மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும். அனைத்துக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவது — உண்மையாகவே கீழ்ப்படிவது என்பது — நம் முழு இதயத்தோடு, எப்போதும் கடவுளை அன்பு செய்வதையும், மற்றவர்களை நம்மைப் போலவே அன்பு செய்வதையும் குறிக்கும்.

கடவுளின் சட்டங்களை வெறும் எழுத்துவடிவமாகப் பார்க்காமல், அவற்றை எப்படி அன்பின் சட்டமாக மாற்ற வேண்டும் என்று இயேசு விளக்குகிறார். ஒவ்வொரு உதாரணத்திலும், எவ்வளவு கடினமாக இருந்தாலும், ஒவ்வொரு பிரச்சனைக்கும் அன்பான அணுகுமுறையையே நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் காட்டுகிறார்.

  • கோபம்: அவரது முதல் தலைப்பு கோபம். பாவம் நிறைந்த கோபம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறது; அந்தப் பாவத்தால் நாமும் தீர்ப்பிடப்படுகிறோம். இயேசு இதற்கு ஒரு மருந்தைத் தருகிறார்: "சென்று, சமரசம் செய்ய தேவையானதைச் செய்யுங்கள்." கடவுளை வழிபடுவதை விட இது மிகவும் முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். கடவுள் அன்பாக இருக்கும்போது, நம் இதயத்தில் அன்பிற்குப் பதில் கோபம் இருந்தால், நமது வழிபாடு எவ்வளவு உண்மையானதாக இருக்க முடியும்?

  • இச்சை மற்றும் விவாகரத்து: அடுத்த உதாரணம் இச்சை. இது அன்பிற்கு எதிரானது, ஏனெனில் இது மற்றவர்களை ஒரு பொருளாக மட்டுமே நடத்துகிறது. மேலும், முறையான திருமணத்திலிருந்து விவாகரத்து பெறுவது என்பது கிறிஸ்து அன்பு செய்வது போல அன்பு செய்யத் தவறுவதாகும். தியாகம் செய்யவும், கஷ்டங்களைத் தாங்கிக்கொள்ளவும் அன்பு கற்றுத்தருகிறது என்று அவர் போதித்தார். மறுமணம் செய்வது அந்தப் பாவத்தை மேலும் வளர்க்கிறது, ஏனெனில் அது முதல் திருமணத் துணைக்குச் செய்யும் அன்பற்ற செயலாகும்.

இயேசு இந்தப் போதனையை வாழ்வின் எல்லாப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்துகிறார். ஒரு உறுதிமொழியை மீறுவது அன்பற்ற செயல். பொய் சொல்வதும், கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற எண்ணாமல் இருப்பதும் அன்பற்ற செயல். உண்மையில், இந்த நற்செய்தி வாசகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மலைப்பொழிவு முழுவதுமே, எப்படி அன்பு செய்ய வேண்டும் என்பதையே விளக்குகிறது.

© by Terry A. Modica, Good News Ministries