Saturday, April 1, 2023

ஏப்ரல் 2 2023 ஞாயிறு நற்செய்தி மறையுரை

ஏப்ரல் 2 2023 ஞாயிறு நற்செய்தி மறையுரை 

குருத்து ஞாயிறு 


Matthew 21:1-11 (procession with palms)

Isaiah 50:4-7

Psalm 22:8-9, 17-20, 23-24

Philippians 2:6-11

Matthew 26:14--27:66


மத்தேயு நற்செய்தி 


காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்

(மாற் 14:10-11; லூக் 22:3-6)

14பின்னர், பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து தலைமைக் குருவிடம் வந்து, 15“இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக்கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்?” என்று கேட்டான். அவர்களும் முப்பது வெள்ளிக் காசுகளை எண்ணி அவனுக்குக் கொடுத்தார்கள். 16அதுமுதல் அவன் அவரைக் காட்டிக் கொடுப்பதற்கு வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தான்.

பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தல்

(மாற் 14:12-16; லூக் 22:7-14)

17புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாளில் சீடர்கள் இயேசுவை அணுகி வந்து, “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள். 18இயேசு அவர்களிடம், “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் சென்று இன்னாரிடம் போய், ‘எனது நேரம் நெருங்கி வந்து விட்டது; என் சீடர்களோடு உம் வீட்டில் பாஸ்கா கொண்டாடப் போகிறேன்’ எனப் போதகர் கூறுகிறார் எனச் சொல்லுங்கள்” என்றார். 19இயேசு தங்களுக்குப் பணித்த படியே சீடர்கள் செயல்பட்டுப் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

யூதாசின் சூழ்ச்சி வெளியாகுதல்

(மாற் 14:17-21; லூக் 22:21-23; யோவா 13:21-30)

20மாலை வேளையானதும் அவர் பன்னிருவரோடும் பந்தியில் அமர்ந்தார். 21அவர்கள் உண்டுகொண்டிருந்த பொழுது அவர், “உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.✠ 22அப்பொழுது அவர்கள் மிகவும் வருத்தமுற்றவர்களாய், “ஆண்டவரே, அது நானோ?” என ஒவ்வொருவரும் அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள். 23அதற்கு அவர், “என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக் கொடுப்பான்.✠ 24மானிட மகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார். ஆனால், ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு; அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருந்திருக்கும்” என்றார். 25அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசும் “ரபி, நானோ?” என அவரிடம் கேட்க இயேசு, “நீயே சொல்லிவிட்டாய்” என்றார்.

ஆண்டவரின் திருவிருந்து

(மாற் 14:22-26; லூக் 22:15-20; 1கொரி 11:23-25)

26அவர்கள் உணவருந்திக்கொண்டிருந்தபொழுது, இயேசு அப்பத்தை எடுத்துக் கடவுளைப் போற்றி, அதைப் பிட்டுச் சீடருக்குக் கொடுத்து, “இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்” என்றார். 27பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, “இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;✠ 28ஏனெனில், இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.✠ 29இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். 30அவர்கள் புகழ்ப் பாடல் பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.

பேதுரு மறுதலிப்பார் என முன்னறிவித்தல்

(மாற் 14:27-31; லூக் 22:31-34; யோவா 13:36-38)

31அதன்பின்பு, இயேசு அவர்களிடம், “இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னை விட்டு ஓடிப்போவீர்கள். ஏனெனில், ‘ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது.✠ 32நான் உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு உங்களுக்கு முன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.✠ 33அதற்குப் பேதுரு அவரிடம், “எல்லாரும் உம்மை விட்டு ஓடிப் போய்விட்டாலும் நான் ஒரு போதும் ஓடிப்போக மாட்டேன்” என்றார். 34இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார். 35பேதுரு அவரிடம், “நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்றார். அவ்வாறே சீடர்கள் அனைவரும் சொன்னார்கள்.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு

(மாற் 14:32-42; லூக் 22:39-46)

36பின்னர் இயேசு சீடர்களுடன் கெத்சமனி என்னும் இடத்திற்கு வந்தார். அவர், “நான் அங்கே போய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள்” என்று அவர்களிடம் கூறி, 37பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். 38அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார். 39பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார்.✠ 40அதன் பின்பு, அவர் சீடர்களிடம் வந்து அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு பேதுருவிடம், “ஒரு மணி நேரம்கூட என்னோடு விழித்திருக்க உங்களுக்கு வலுவில்லையா? 41உங்கள் மனம் ஆர்வமுடையதுதான்; ஆனால், உடல் வலுவற்றது. எனவே, சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்” என்றார். 42மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 43அவர் திரும்பவும் வந்தபோது சீடர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. 44அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார். 45பிறகு சீடர்களிடம் வந்து, “இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? பாருங்கள், நேரம் நெருங்கி வந்து விட்டது. மானிட மகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படுகிறார். 46எழுந்திருங்கள், போவோம். இதோ! என்னைக் காட்டிக்கொடுப்பவன் நெருங்கி வந்து விட்டான்” என்று கூறினார்.

இயேசுவைக் காட்டிக்கொடுத்தலும் கைது செய்தலும்

(மாற் 14:43-50; லூக் 22:47-53; யோவா 18:3-12)

47இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது. 48அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், “நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்; என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.✠ 49அவன் நேராக இயேசுவிடம் சென்று, “ரபி வாழ்க” எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். 50இயேசு அவனிடம், “தோழா, எதற்காக வந்தாய்?” என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர். 51உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். 52அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர். 53நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு⁕ மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. 54அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்?” என்றார்.✠ 55அவ்வேளையில் இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, “கள்வனைப் பிடிக்க வருவதுபோல் வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைதுசெய்ய வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் அமர்ந்து கற்பித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே;✠ 56இறைவாக்கினர் எழுதியவை நிறைவேறவே இவையனைத்தும் நிகழ்கின்றன” என்றார். அப்பொழுது சீடர்களெல்லாரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினார்கள்.

தலைமைச் சங்கத்தின் முன்னிலையில் இயேசு

(மாற் 14:53-65; லூக் 22:54-55; 63-71; யோவா 18:13-14, 19-24)

57இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்சென்றார்கள். அங்கே மறைநூல் அறிஞரும், மூப்பர்களும் கூடி வந்தார்கள். 58பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்து தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து வழக்கின் முடிவைப்பற்றித் தெரிந்து கொள்வதற்காக உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருந்தார். 59தலைமைக் குருக்களும், தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடினர். 60பல பொய்ச் சாட்சிகள் முன்வந்தும் ஏற்ற சாட்சி கிடைக்கவில்லை. இறுதியாக இருவர் முன்வந்தனர். 61அவர்கள், “இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்” என்று கூறினார்கள்.✠ 62அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவரிடம், “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும் சான்றுக்கு மறுமொழி கூறமாட்டாயா?” என்று கேட்டார். 63ஆனால், இயேசு பேசாதிருந்தார். மேலும், தலைமைக் குரு அவரிடம், “நீ கடவுளின் மகனாகிய மெசியாவா? வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுச் சொல்லுமாறு உன்னிடம் கேட்கிறேன்” என்றார். 64அதற்கு இயேசு, “நீரே சொல்லுகிறீர்; மானிட மகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வான மேகங்கள்மீது வருவதையும் இதுமுதல் நீங்கள் காண்பீர்கள் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.✠ 65உடனே தலைமைக் குரு தம் மேலுடையை கிழித்துக்கொண்டு, “இவன் கடவுளைப் பழித்துரைத்தான். இன்னும் நமக்குச் சான்றுகள் தேவையா? இதோ, இப்பொழுது நீங்களே பழிப்புரையைக் கேட்டீர்களே. 66நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “இவன் சாக வேண்டியவன்” எனப் பதிலளித்தார்கள். 67பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து,✠ 68“இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்” என்று கேட்டனர்.

பேதுரு மறுதலித்தல்

(மாற் 14:66-72; லூக் 22:56-62; யோவா 18:15-18, 25-27)

69பேதுரு வெளியே முற்றத்தில் உட்கார்ந்திருந்தார். பணிப்பெண் ஒருவர் அவரிடம் வந்து, “நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே” என்றார். 70அவரோ, “நீர் சொல்வது என்னவென்று எனக்குத் தெரியவில்லை” என்று அவர்கள் அனைவர் முன்னிலையிலும் மறுதலித்தார். 71அவர் வெளியே வாயிலருகே சென்றபோது வேறொரு பணிப்பெண் அவரைக் கண்டு, “இவன் நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்” என்று அங்கிருந்தோரிடம் சொன்னார். 72ஆனால், பேதுரு, “இம்மனிதனை எனக்குத் தெரியாது” என ஆணையிட்டு மீண்டும் மறுதலித்தார். 73சற்று நேரத்திற்குப்பின் அங்கே நின்றவர்கள் பேதுருவிடம் வந்து, “உண்மையாகவே நீயும் அவர்களைச் சேர்ந்தவனே; ஏனெனில், உன் பேச்சே உன்னை யாரென்று காட்டிக்கொடுக்கிறது” என்று கூறினார்கள். 74அப்பொழுது அவர், “இந்த மனிதனை எனக்குத் தெரியாது” என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும் தொடங்கினார். உடனே சேவல் கூவிற்று. 75அப்பொழுது, “சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்” என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்.

இயேசுவைப் பிலாத்திடம் கொண்டு செல்லுதல்

(மாற் 15:1; லூக் 23:1-2; யோவா 18:28-32)

1பொழுது விடிந்ததும் தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் யாவரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர். 2அவரைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்.

யூதாசின் தற்கொலை

(திப 1:18-19)

3அதன்பின் இயேசு தண்டனைத் தீர்ப்பு அடைந்ததைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் முப்பது வெள்ளிக் காசுகளையும் திருப்பிக் கொண்டு வந்து, 4“பழிபாவமில்லாதவரைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்” என்றான். அதற்கு அவர்கள், “அதைப்பற்றி எங்களுக்கென்ன? நீயே பார்த்துக்கொள்” என்றார்கள். 5அதன் பின்பு அவன் அந்த வெள்ளிக் காசுகளைக் கோவிலில் எறிந்து விட்டுப் புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக் கொண்டான். 6தலைமைக் குருக்கள் வெள்ளிக் காசுகளை எடுத்து, “இது இரத்தத்திற்கான விலையாதலால் இதைக் கோவில் காணிக்கைப் பெட்டியில் போடுவது முறை அல்ல” என்று சொல்லி, 7கலந்தாலோசித்து, அந்நியரை அடக்கம் செய்ய அவற்றைக் கொண்டு குயவன் நிலத்தை வாங்கினார்கள். 8இதனால்தான் அந்நிலம் “இரத்த நிலம்” என இன்றுவரை அழைக்கப்படுகிறது.

9-10“இஸ்ரயேல் மக்களால் விலைமதிக்கப் பட்டவருடைய விலையான முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவர் எனக்குப் பணித்தபடியே அதைக் குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்”✠


என்று இறைவாக்கினர் எரேமியா உரைத்தது அப்பொழுது நிறைவேறியது.

இயேசுவைப் பிலாத்து விசாரணை செய்தல்

(மாற் 15:2-5; லூக் 23:3-5; யோவா 18:33-38)

11இயேசு ஆளுநன் பிலாத்து முன்னிலையில் நின்று கொண்டிருந்தார். ஆளுநன் அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று கூறினார். 12மேலும், தலைமைக் குருக்களும் மூப்பர்களும் அவர்மீது குற்றம் சுமத்தியபோது அவர் மறுமொழி எதுவும் கூறவில்லை. 13பின்பு, பிலாத்து அவரிடம், “உனக்கு எதிராக எத்தனையோ சான்றுகள் கூறுகிறார்களே, உனக்குக் கேட்கவில்லையா?” என்றான். 14அவரோ ஒரு சொல்கூட அவனுக்கு மறுமொழியாகக் கூறவில்லை. ஆகவே ஆளுநன் மிகவும் வியப்புற்றான்.

இயேசுவுக்கு மரணதண்டனை விதித்தல்

(மாற் 15:6-15; லூக் 23:13-25; யோவா 18:39-19:16)

15மக்கள் விரும்பிக் கேட்கும் ஒரு கைதியை அவர்களுக்காக, விழாவின் போது ஆளுநன் விடுதலை செய்வது வழக்கம். 16அந்நாளில் பரபா⁕ என்னும் பேர்போன கைதி ஒருவன் இருந்தான். 17மக்கள் ஒன்றுகூடி வந்திருந்தபோது பிலாத்து அவர்களிடம், “நான் யாரை விடுதலை செய்யவேண்டும் என விரும்புகிறீர்கள்? பரபாவையா?* அல்லது மெசியா என்னும் இயேசுவையா?” என்று கேட்டான். 18ஏனெனில், அவர்கள் பொறாமையால்தான் இயேசுவைத் தன்னிடம் ஒப்புவித்திருந்தார்கள் என்பது அவனுக்குத் தெரியும். 19பிலாத்து நடுவர் இருக்கைமீது அமர்த்திருந்தபொழுது அவனுடைய மனைவி அவனிடம் ஆளனுப்பி, “அந்த நேர்மையாளரின் வழக்கில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்” என்று கூறினார். 20ஆனால், தலைமைக் குருக்களும் மூப்பர்களும் பரபாவை விடுதலை செய்யக் கேட்கவும் இயேசுவைத் தீர்த்துக்கட்டவும் கூட்டத்தினரைத் தூண்டி விட்டார்கள். 21ஆளுநன் அவர்களைப் பார்த்து, “இவ்விருவரில் யாரை விடுதலை செய்யவேண்டும்? உங்கள் விருப்பம் என்ன?” எனக் கேட்டான். அதற்கு அவர்கள் ‘பரபாவை’ என்றார்கள். 22பிலாத்து அவர்களிடம், “அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான். அனைவரும், “சிலுவையில் அறையும்” என்று பதிலளித்தனர். 23அதற்கு அவன், “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்டான். அவர்களோ, “சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள். 24பிலாத்து தன் முயற்சியால் பயனேதும் ஏற்படவில்லை, மாறாகக் கலகமே உருவாகிறது என்று கண்டு, கூட்டத்தினரின் முன்னிலையில் தண்ணீரை எடுத்து, “இவனது இரத்தப்பழியில் எனக்குப் பங்கில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறித் தன் கைகளைக் கழுவினான்.✠ 25அதற்கு மக்கள் அனைவரும், “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள் மேலும் விழட்டும்” என்று பதில் கூறினர். 26அப்போது அவர் பரபாவை அவர்கள் விருப்பத்திற்கிணங்க விடுதலை செய்தான்; இயேசுவைக் கசையால் அடித்துச் சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

படைவீரர்கள் இயேசுவை ஏளனம் செய்தல்

(மாற் 15:16-20; யோவா 19:2-3)

27ஆளுநனின் படைவீரர் இயேசுவை ஆளுநன் மாளிகைக்குக் கூட்டிச் சென்று அங்கிருந்த படைப்பிரிவினர் அனைவரையும் அவர்முன் ஒன்று கூட்டினர்; 28அவருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர். 29அவர்கள் ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்து, அவருடைய வலக்கையில் ஒரு கோலைக் கொடுத்து அவர்முன் முழந்தாள்படியிட்டு, “யூதரின் அரசரே, வாழ்க!” என்று சொல்லி ஏளனம் செய்தனர்; 30அவர்மேல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்; 31அவரை ஏளனம் செய்தபின், அவர்மேல் இருந்த தளர் அங்கியைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக இழுத்துச் சென்றனர்.

இயேசுவைச் சிலுவையில் அறைதல்

(மாற் 15:21-32; லூக் 23:26-43; யோவா 19:17-27)

32அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். 33‘மண்டையோட்டு இடம்’ என்று பொருள்படும் ‘கொல்கொதா’வுக்கு வந்தார்கள்; 34இயேசுவுக்குக் கசப்பு கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். அவர் அதைச் சுவை பார்த்தபின் குடிக்க விரும்பவில்லை.✠ 35அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்த பின்பு குலுக்கல் முறையில் அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள்;✠ 36பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; 37அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் “இவன் யூதரின் அரசனாகிய இயேசு” என்று எழுதப்பட்டிருந்தது. 38அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். 39அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, உன்னையே விடுவித்துக்கொள்.✠ 40நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா” என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.✠ 41அவ்வாறே தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து அவரை ஏளனம் செய்தனர். 42அவர்கள், “பிறரை விடுவித்தான்; தன்னையே விடுவிக்க இயலவில்லை. இவன் இஸ்ரயேலுக்கு அரசனாம்! இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது நாங்கள் இவனை நம்புவோம். 43கடவுளிடம் இவன் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தானாம்! அவர் விரும்பினால் இப்போது இவனை விடுவிக்கட்டும். ‘நான் இறைமகன்’ என்றானே!” என்று கூறினார்கள்.✠ 44அவ்வாறே, அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்வர்களும் அவரை இகழ்ந்தார்கள்.

இயேசு உயிர்விடுதல்

(மாற் 15:33-41; லூக் 23:44-49; யோவா 19:28-30)

45நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. 46மூன்று மணியளவில் இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார்.✠ 47அங்கே நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர். 48உடனே அவர்களுள் ஒருவர் ஓடிச் சென்று, கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து அதைக் கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.✠ 49மற்றவர்களோ, ‘பொறு, எலியா வந்து இவனை விடுவிப்பாரா என்று பார்ப்போம்”⁕ என்றார்கள். 50இயேசு மீண்டும் உரத்த குரலில் கத்தி உயிர்விட்டார்.

51அதே நேரத்தில் திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது; நிலம் நடுங்கியது; பாறைகள் பிளந்தன. 52கல்லறைகள் திறந்தன; இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன. 53இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இவர்கள் கல்லறைகளிலிருந்து வெளியே வந்து எருசலேம் திருநகரத்திற்குச் சென்று பலருக்குத் தோன்றினார்கள். 54நூற்றுவர் தலைவரும் அவரோடு இயேசுவைக் காவல் காத்தவர்களும் நிலநடுக்கத்தையும் நிகழ்ந்தயாவற்றையும் கண்டு மிகவும் அஞ்சி, “இவர் உண்மையாகவே இறைமகன்” என்றார்கள். 55கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்த பல பெண்களும் அங்கிருந்தார்கள். அவர்கள் தொலையில் நின்று உற்று நோக்கிக் கொண்டிருந்தார்கள். 56அவர்களிடையே மகதலா மரியாவும் யாக்கோபு, யோசேப்பு ஆகியோரின் தாய் மரியாவும் செபதேயுவின் மக்களுடைய தாயும் இருந்தார்கள்.

இயேசுவின் அடக்கம்

(மாற் 15:42-47; லூக் 23:50-56; யோவா 19:38-42)

57மாலை வேளையானதும் அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்னும் பெயர் கொண்ட செல்வர் ஒருவர் அங்கே வந்தார். அவரும் இயேசுவுக்குச் சீடராய் இருந்தார். 58அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதைக் கொடுத்துவிடக் கட்டளையிட்டான். 59யோசேப்பு அவ்வுடலைப் பெற்று, தூய்மையான மெல்லிய துணியால் சுற்றி, 60தமக்கெனப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் கொண்டுபோய் வைத்தார்; அதன் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார். 61அப்பொழுது மகதலா மரியாவும் வேறோரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே உட்கார்ந்திருந்தனர்.

கல்லறைக்குக் காவல்

62மறுநாள், அதாவது ஆயத்த நாளுக்கு⁕ அடுத்த நாள், தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் பிலாத்திடம் கூடி வந்தார்கள். 63அவர்கள், “ஐயா, அந்த எத்தன் உயிருடன் இருந்தபொழுது ‘மூன்று நாளுக்குப் பின்பு நான் உயிருடன் எழுப்பப்படுவேன்’ என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது. 64ஆகையால், மூன்று நாள்வரை கல்லறையைக் கருத்தாய்க் காவல் செய்யக் கட்டளையிடும். இல்லையெனில் அவருடைய சீடர்கள் ஒருவேளை வந்து அவன் உடலைத் திருடிச் சென்றுவிட்டு, ‘இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்’ என்று மக்களிடம் சொல்ல நேரிடும். அப்பொழுது முந்தின ஏமாற்று வேலையைவிடப் பிந்தினது மிகுந்த கேடு விளைவிக்கும்” என்றனர். 65அதற்குப் பிலாத்து அவர்களிடம், “உங்களிடம் காவல் வீரர்கள் இருக்கிறார்கள். நீங்களே போய் உங்களுக்குத் தெரிந்தபடி கருத்தாய்க் காவல் செய்யுங்கள்” என்றார். 66அவர்கள் போய்க் கல்லறையை மூடியிருந்த கல்லுக்கு முத்திரையிட்டு, காவல் வீரரைக் கொண்டு கருத்தாய்க் காவல் செய்ய ஏற்பாடு செய்தார்கள்.

(thanks www.arulvakku.com)


இயேசுவின் பேரிரக்கமுள்ள அன்பு


"திருப்பாடுகள்/பேரன்பு" என்ற வார்த்தை சக்திவாய்ந்த தாக்கங்களைக் கொண்டுள்ளது. இறையியல் ரீதியாக, இயேசு நம் பாவங்களின் தண்டனை மற்றும் அழிவு சக்திகளை மனமுவந்து ஏற்றுக்கொண்டபோது, அவர் அடித்து, கேலி செய்யப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டபோது நம் ஒவ்வொருவருக்கும் அனுபவித்த துன்பமான அன்பை விவரிக்க இதைப் பயன்படுத்துகிறோம்.


காதல், காமம், ஈர்ப்பு போன்ற வலுவான உணர்வுகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் உலகம் "ஆஸ்ந்த அன்பு" என்ற வார்த்தையை போலியாக உருவாக்குகிறது.

நாம் அனுபவிக்கும் அல்லது மிகுந்த அக்கறை கொண்ட ஒரு செயலைச் செய்வதற்கான வலுவான உந்துதலைக் குறிக்கவும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறோம், அதனால்தான் இயேசு திருப்பாடுகளை  தாங்கும் போது நம்மீது "பேரன்புடன்" அக்கறை காட்டினார் என்று நாம் கூறலாம்.



இயேசு தனது ஊழியத்திலும் புனித வெள்ளியிலும் வெளிப்படுத்திய வலுவான அன்பு, மற்றவர்களிடம் "இரக்கம்" காட்டுவதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றிய பாடமாகும். அவர்களின் துன்பங்களில் நாம் அவர்களுடன் நடக்கிறோம்; நாங்கள் அவர்களுடன் "பாதிக்கப்படுகிறோம்". இது அதன் புனிதமான வடிவத்தில் உணர்ச்சிவசப்பட்ட காதல்.

இயேசுவின் உன்னதமான அன்பை அவை எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்பதைக் கண்காணித்து, குருத்து  ஞாயிறுக்கான வேதவசனங்களைப் படியுங்கள்.

இயேசுவை உற்சாகமாக வரவேற்ற மக்கள் மற்றும் அவரை நிராகரித்தவர்கள் மற்றும் மறுத்தவர்கள் ஆகியோரின் ஆர்வத்தில் உங்களைப் பாருங்கள்.



இயேசு தம்முடைய இறுதி நேரத்தின் வேதனையான வேதனைகளுக்குத் தன்னைத்தானே உட்படுத்திக்கொண்டபோது, உங்கள் மீது எவ்வளவு பரிவு காட்டியிருப்பார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்கள் மீது இரக்கம் இல்லாததால் நீங்கள் அவரை எவ்வளவு காயப்படுத்தியிருந்தாலும் அவர் உங்களுக்காக இதைச் செய்தார். சந்தோசம் அடையுங்கள், அவர் உங்கள் மீதுள்ள தீவிர அன்பு! இது மனந்திரும்பவும், மற்றவர்களிடம் பரிசுத்த அன்பில் வலுவாக வளரவும் உங்களுக்கு அதிகாரம் அளிக்கும்.


© 2023 Good News Ministries


No comments: