Friday, July 8, 2011

ஜுலை 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை

ஜுலை 10, 2011 ஞாயிறு நற்செய்தி, மறையுரை
ஆண்டின் 15ம் ஞாயிறு

Isaiah 55:10-11
Ps 65:10-14 (with Luke 8:8)
Rom 8:18-23
Matt 13:1-23
நற்செய்தி வாசகம்
விதைப்பவர் விதைக்கச் சென்றார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-23
அக்காலத்தில் இயேசு வீட்டிற்கு வெளியே சென்று கடலோரத்தில் அமர்ந்தார். மக்கள் பெருந்திரளாய் அவரிடம் ஒன்றுகூடி வந்தனர். ஆகவே அவர் படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தனர்.
அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றைக் குறித்து அவர்களோடு பேசினார்: ``விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. வேறு சில விதைகள் மிகுதியாக மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்தன. அங்கே மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன; ஆனால் கதிரவன் மேலே எழ,அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப் போயின. மற்றும் சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கி விட்டன. ஆனால் இன்னும் சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் சில நூறு மடங்காகவும், சில அறுபது மடங்காகவும், சில முப்பது மடங்காகவும் விளைச்சலைக் கொடுத்தன. கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்றார்.
சீடர்கள் அவர் அருகே வந்து, ``ஏன் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகின்றீர்?'' என்று கேட்டார்கள். அதற்கு இயேசு அவர்களிடம் மறுமொழியாகக் கூறியது: ``விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது; அவர்களுக்கோ கொடுத்து வைக்கவில்லை. உள்ளவருக்குக் கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும். அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; புரிந்து கொள்வதுமில்லை. இதனால்தான் நான் அவர்களோடு உவமைகள் வாயிலாகப் பேசுகிறேன்.
இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: `நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை. இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது;காதும் மந்தமாகி விட்டது. இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள்; எனவே கண்ணால் காணாமலும் காதால் கேளாமலும் உள்ளத்தால் உணராமலும் மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.' உங்கள் கண்களோ பேறுபெற்றவை;ஏனெனில் அவை காண்கின்றன. உங்கள் காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; பல இறைவாக்கினர்களும் நேர்மையாளர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண ஆவல் கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை.
எனவே விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்துகொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள். எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்க மாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''

மறையுரை
இன்றைய ஞாயிறின் நற்செய்தி, விதை விதைப்பதை பற்றி கூறுகிறது. இதிலிருந்து நாம் கற்று கொள்வது என்னவென்றால், விதைக்கப்பட்ட விதை நிலத்தில் விழுந்து பலன் தராவிட்டால், விதை விதைத்ததற்கு உண்டான முயற்சி வீனாகிவிடும். ஒவ்வொரு விதையும், அது முன்னாடி இருந்தது போல் இல்லாமல், அழிந்து வேறொரு செடியை கொடுக்க வேண்டும். அந்த விதை மண்ணோடு அழிந்து, புதிய செடியை , தண்டிலிருந்து ஆரம்பித்து, பல மடங்காக பெருகி பெரிய மரமாக பலபேருக்கு உதவக்கூடியதாக மாறும். ஆனால், விதையிலிருந்து, மரமாக ஆகும், வரை தரமான பராமரிப்பு, வேண்டிய ஊட்டசத்தும் கொடுக்க வேண்டும்.


விதை மண்ணிலேயே அழிந்து, சரியான ஊட்ட்சத்துடன் வளரும்பொழுது, அது செடியாக மரமாக வளர்ந்து, பல மடங்காக பெருகி, இயற்கையின் எல்லா வளங்களும், இதன் பலனை அடைவது தான் இதன் நோக்கமாகும்.


இயேசு உவமையை சொல்லி நாம் கேட்கும் பொழுது, நாம் அதற்கு ஆம் என்று சொல்கிறோம். நாம் நல்ல விதையாக இருந்து, நல்ல பழங்களை தருவோம் என்று இயேசுவிடம் 'ஆம்' என்று சொல்கிறோம். நாம் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைபடுவது மட்டும், நம்மை அப்படியே மாற்றிவிடாது. நமது வாழ்வின் மண்ணை, எப்படி மாற்றினால், நாம் நல்ல பழங்களை தரமுடியும் ?

இறைவாக்கினர் எசாயா வாசகத்தில், கடவுளே நல்ல விளைச்சலை தரும் மண் என்று சொல்கிறார். கடவுளும், அவர் வார்த்தைகளும், மேலும் அவர் எதையெல்லாம் விரும்புகிறாரோ அதனையெல்லாம் கொடுக்க கூடிய மண்ணாவகே கடவுள் இருக்கிறார். புனித பவுல் இரண்டாவது வாசகத்தில், துன்பப்பட்டால், தான், ஒன்றை உருவாக்க முடியும் என்று சொல்கிறார்.(விதைகள் மண்ணில் அழிந்து மீண்டும் செடியாக உருவானால் தான் பழங்களை தரமுடியும்). துன்பத்திலும், இறப்பிலும் தான் நமக்கு மீட்பு கிடைக்கும்.
நாம் மண்ணாக மாறி, கடவுள் நம்மை மாற்றியமைக்க அனுமதித்தால் மட்டுமே, நாம் உண்மையாகவே முழுதுமாக கணி தரும் மரமாக மாறமுடியும்.



© 2011 by Terry A. Modica

No comments: